Friday, October 23, 2015

சோழர்கள் வரலாறு அத்தியாயம் 1 - முற்காலச் சோழர்கள்


வணக்கம், மிக நீண்ட காலமாக சிந்தனையில் இருந்தது இன்று உரு பெற்று இருக்கிறது. வரலாறு என்றாலே நமக்கு அலுப்பு தட்டும் சிந்தனையாக தான் பார்க்கபடுகிறது.பள்ளியில் வரலாறு ஒரு பிடிக்காத பாடமாகியது. நம் முன்னோர்களின் வரலாற்று படிப்பதிலையோ,கேட்பதிலையோ நாம் காட்டும் அலஞ்சியங்கல் வேறு நாட்டு வரலாற்று நாயகர்களிடம் காட்டுவதில்லை. நான் புத்தகம் வாசிக்க ஆரம்பித்த புதித்தில் மாவீரன் அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முஹம்மத், செங்கிஸ் கான் மற்றும் பல மன்னர்களின் கதைகளை படித்தேனே தவிர நம் நாட்டின் மன்னர்களை பற்றியும் அவர்களின் வரலாற்றை பற்றியும் அறிய முற்படவில்லை. பிறகு கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, யுவன ராணி, வந்தார்கள் வென்றார்கள் மற்றும் சில வரலாற்று சார்புடைய வாசிப்பு தான் எனக்கு இந்த பதிவுக்கு ஒரு ஈர்ப்பை கொடுத்தது. அடுத்தவர்களின் வரலாற்றை படித்தது போதும் நம் வரலாற்றை பற்றியும் சிறிது தெரிந்துகொள்வோம். அதற்கான எனது வரலாற்று தேடல் தான் இப்பதிவு. முதற்கட்டமாக தெற்கு ஆசியாவை ஆண்ட சோழர்களை பற்றிய தேடல்களும் அதன் தொகுப்புகளும் உங்களின் பார்வைக்காக. இந்த தேடலின் விடை மிகவும் நீளமாக இருப்பதினால் மூன்று பதிவுகளாக பிரித்து முற்காலச் சோழர்கள், இடைக்காலச் சோழர்கள்,சாளுக்கிய சோழர்கள் பிரிவுகளாக புகைபடத்துன்  தொகுத்துள்ளேன். வாருங்கள் நம் வரலாற்று கதாநாயகர்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!!


                                                          தமிழ் வாழ்க!!!
நன்றி 
-சிதம்பரம் சிவா 


சோழர்கள் வரலாறு அத்தியாயம் 1 - முற்காலச் சோழர்கள்




செம்பியன்:

தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் என்பவன் ஒரு சோழ மன்னன் ஆவான். செம்பியன் என்பவன் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறான். இந்திர விழாவை இவனே ஆரம்பித்தான். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான். புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவன் என்று கூறப்பெறுகிறான். மேலும் இவரை பற்றிய கிடைக்கபெறவில்லை.

எல்லாளன்: 
கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ்மன்னன். இந்தத் தகவலைச் இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான். மனுநீதிச் சோழன் அல்லது மனுநீதி கண்ட சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் எனக்கருதப்படுபவன். இவரும் எல்லாளனும் ஒன்று எனவும் வெவ்வேறானவர்கள் எனவும் கருதப்படுகிறது.


இளஞ்சேட்சென்னி:

பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன். இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது. இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான்.



கரிகால் சோழன்:

கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான். 


கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். 

சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோணை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர்.


நெடுங்கிள்ளி:

முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக கூறபடுகிறது.

நலங்கிள்ளி:


தன் தந்தையைப்போல், நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். இந்த சோழ மன்னன் விம்மிய உள்ளம் படைத்தோர்க்கு அரசுரிமை தகுமேயன்றி உள்ளத்தால் சிறியவர்க்குப் பொருந்தாது என்னும் கொள்கை உடையவன். இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் கூறுவர்.

இவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளி க்கும் (நலங்கிள்ளிக்குப் பெரியப்பா மகன், சகோதரன் முறை) பகை மூண்டது. அப்பொழுது, ‘பகைவர் ஈயென இரப்பின் இன்னுயிரும் தருவேன்; அரசுரிமையும் ஒரு பொருளன்று; அவர் அதனை என்னோடு பகைத்துப் பெறக் கருதினால், கழை தின்னும் யானையின் காலகப்பட்ட முளைபோலக் கெடுத்து ஒழிப்பேன்’ என்று இவன் கூறும் வஞ்சினம் இவனது மனவலிமையைப் புலப்படுத்தும்.

ஒரு சமயம் நெடுங்கிள்ளி ஆவூரிலிருந்த போது, நலங்கிள்ளியின் தம்பி
மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டான். பின் நெடுங்கிள்ளி உறையூருக்குச் சென்று தங்க, நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான். ஆனாலும் நெடுங்கிள்ளி போருக்கு வராமல், தன் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அச்சமயம், கோவூர் கிழார் என்னும் புலவர், நெடுங் கிள்ளியிடம் சென்று, “நீ அறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு; மறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளியுடன் போர் செய். எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டிருப்பது வெட்கத்திற்குரியது” என்று அறிவுரை கூறினார் (புறநானூறு – 44). நலங்கிள்ளி க்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் தொடங்கியது. அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வியடைந்து, நலங்கிள்ளி உறையூரைத் தனக்குரியதாக்கி, தனது வரையா ஈகையால் புகழ் பெற்றான். அக்காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்புற்றிருந்த மலை அரண்கள் ஏழினைக் கைப்பற்றி, அவ்விடங் களில் தன் புலிப்பொறியை வைத்தான். இவனது வெற்றி கிழக்கே கீழ்க்கடலும் (வங்காள விரிகுடா), மேற்கே குடகடலுமாகிய (அரபிக்கடல்) இரண்டிற் குமிடையே பரந்திருக்கக் கண்ட வடநாட்டரசர், தங்கள் நாடு நோக்கி இச்சோழன் வருவானோ என்று நடுங்கித் தூக்கத்தைத் தொலைத்தனர். புறநானூற்றில் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார். 


அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும்உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர்

கிள்ளிவளவன்:

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. 


இவன் கருவூரை முற்றுகையிட்டுச் சேரனின் காவல் மரங்களை வெட்டினான். அதன் ஓசையைக் கேட்டுக்கொண்டு, சோழனுக்குப் பயந்து சேரன் கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். இத்தகைய பயந்தாங்கொள்ளியோடு போரிடுவது இழுக்கு என்று வளவனுக்கு எடுத்துரைத்தார். தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இவனது அரண்மனையில் அடுதீ அல்லது சுடுதீ இல்லையாம். உணவு சமைப்பதும் வழங்குவதும் நிகழ்ந்துகொண்டே இருக்குமாம்.

பாணர்க்கு நிலையான செல்வம் வழங்கினான். வடகிழக்குப் பருவ மழையால்
சோழநாட்டில் பெய்யும் மழைத்துளிகளைக் காட்டிலும் பல நாள் இந்த வளவன் வாழவேண்டும். இவனை யாராலும் கொல்ல முடியாது. இவன் கொடையாளி ஆகையால் எமன் (குளமுற்றம் என்னும் ஊரிலிருந்தபோது) இவனிடம் இரந்து இவனது உயிரைப் பெற்றான் போலும். இவன் இறந்தபோது இவனை அண்டி வாழ்ந்த பலர் இவனோடு சேர்ந்து உயிர் துறந்திருக்கிறார்கள்

கோப்பெருஞ்சோழன்:

உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.

கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இம்மன்னன் பிசிராந்தையாரை
நேரில் காணாமலேயே அவருடன் நட்புக்கொண்டவன். இவனது ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்



கோச்செங்கணான்:

முற்காலச் சோழப் பெருவேந்தர்களுள் குறிப்பிடத்தக்க சிலருள் முதன்மையானவன் சோழன் கோச்செங்கணான். இப்பெருமகனைப்பற்றிப் பல வரலாற்றுக் குறிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில வரலாற்று ஆய்வாளர்கள் இப்பெருமகனைச் சங்ககாலச் சோழப்பேரரசர்களுள் ஒருவனாகக் கொள்கின்றனர். வேறு ஆய்வாளர் சிலர் நீண்ட செடும் ஆய்வுக்குப் பிறகு கோச்செங்கணான் தமிழகத்தின் இருண்ட காலத்தில் வாழ்ந்த (கி.பி. 300-600) மன்னர்களுள் ஒருவன் என்று வரையறுக்கின்றனர்.

முதல்போர் குணவாயிற் கோட்டத்தில் கி.மு. 45 இல் நடைபெற்றது. சேரன் தோற்றான். இரண்டாம் போர் சோழ நாட்டு வெண்ணிப் பறந்தலையில் கி.மு. 42 இல் நடைபெற்றது. இதிலும் சேரன் தோற்றான். மூன்றாம் போர் கழுமலம் என்னும் இடத்தில் கி.மு. 40 இல் நடைபெற்றது. இதிலும் சேர அரசன் தோற்றுச் சிறைபிடிக்கப் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான். இது கேள்விப்பட்டு, பொய்கையார், கடைச்சங்கப் புலவராயும் சோழன் கோச்செங்கணானின் நண்பராகவும் இருந்தமையால், சோழன் வெற்றியைக் குறித்துக் களவழி பாடி அதற்குப் பரிசாக சேரனைச் சிறையினின்று மீட்டார்.

நான்காம் போர், கொங்கு நாட்டில் திருப்பூருக்குப் பக்கத்திலுள்ள (திருப்போர்ப்புறம்) கோயில் வெளி என்னும் இடத்தில் கி.மு. 35 இல் நடந்தது. இதிலும் சேரன் தோல்வியுற்று மீட்டும் சிறைபிடிக்கப்பட்டான்.

சங்ககாலச் சோழன் செங்கணான் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில்
நடந்த போரில் சேரமான் கணைக்காலிரும் பொறையைக் கைதுசெய்து கொண்டுவந்து உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் வைத்தான். சிறைக் காவலர் காலம் தாழ்த்தித் தந்த தண்ணீரைப் பருகாமல் கணைக்காலிரும்பொறை தன்மானத்தை விளக்கும் பாடல் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிர் துறந்தான். சங்ககாலச் சோழரின் கடைசி அரசன் சோழன் செங்கணான். காலம் கி.பி. 400-க்குச் சற்று முன்பின்.

சிவாலயங்கள் கட்டிய கோச்செங்கணான். காலம் கி.பி. 500-க்குச் சற்று முன்பின். (தேவாரம் தோன்றிய காலத்துக்குச் சற்று முன்). தில்லைக்குத் தில்லை, மதுரைக்குக் கடம்பம், காஞ்சிக்கு மா, குற்றாலத்திற்குக் குறும்பலா என்று ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மரத்தை தலவிருட்சமாக அமைத்த மன்னர் கோச்செங்கணான் எனும் கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்


பெருநற்கிள்ளி

சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.


பெருங்கிள்ளிக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையன் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியவில்லை.









அடுத்த பதிவில் இடைக்கால சோழர்களின் விழ்ச்சியும், பின்பு சோழ இராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் மிக முக்கியமான ஆதித்த சோழன், ஆதித்த கரிகாலன், இராசராச சோழன், இராசேந்திர சோழன் மற்றும் அவர்கள் முன் பின் தோன்றல்களையும் விரிவாக பார்க்கலாம்