Sunday, July 30, 2017

சோழர்கள் வரலாறு அத்தியாயம் 3 - சாளுக்கிய சோழர்கள்

சென்ற பதிவில் இடைக்காலச் சோழர்களை பற்றி தெரிந்துகொண்டோம். தொடர்ந்து பதிவுகள் போடமுடியவில்லை, இருந்தும் இடைப்பட்ட காலத்தில் பல தகவல்களை சேகரித்து சுவரசியமாய் படிக்கும் வகையில் தொகுத்து பதிவிட்டுள்ளேன். சிற்றரசர்களாக சரிந்து பின்பு பேரரசாக நிறுவிய சோழ மன்னர்கள் மீண்டும் கப்பம் கட்டும் சிற்றரசர்களாக மாறினார்கள். யார் ஆட்சியில் சிற்றரசர்களாய் மாறினார்கள் என்பதை இப்பதிவில் காணப்போகிறோம். வாருங்கள் சோழ பேரரசாக உயர்ந்த நம் சோழ கதாநாயகர்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!!


                                                          தமிழ் வாழ்க!!!


நன்றி 
-ஜெ . சிவா 

சோழர்கள் வரலாறு அத்தியாயம் 3   சாளுக்கிய சோழர்கள்


முன்பதிவு சுருக்கம்


விசயாலய சோழனில் தொடங்கி அதிராசேந்திர சோழன் வரையிலான அரசர்கள் மட்டுமே விசயாலய வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்களை  
இடைக்காலச் சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.இவர்கள் காலக்கட்டத்தில்தான் சோழநாடு சோழசாம்ராஜ்ஜியமாக உருவெடுத்தது. இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க மன்னர்களாக கருதப்படுபவர்கள் 

1. விசயாலய சோழன் (848-871) - திருப்புறம்பயம் போர்(முந்தைய பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம்)
2. முதலாம் பராந்தக சோழன் -(907-950) - தலைநகர் - தஞ்சாவூர்
             மதுரையும், ஈளமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் 
             சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் 
            தில்லைச் சிற்றம்பலத்துக்கு(சிதம்பரம் நடராஜர் ஆலயம்) பொன்              கூறை வேய்ந்தவன், எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்”  
என்று அழைக்கப்பட்டார்.
           வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு           ஆகியவற்றை அறிமுகம் செய்தவன்
3. சுந்தர சோழன் - (957-973) தலைநகர் - தஞ்சாவூர்
4. ஆதித்த கரிகாலன்:(957-969) தலைநகர் - காஞ்சிபுரம் 
           பிற பெயர்: பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன்
5.முதலாம் இராசராச சோழன்: (985-1014) தலைநகர் - தஞ்சாவூர்
           பிறந்தநாள் – 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம்.
           இயற்பெயர் "அருள்மொழிவர்மன்"
6. முதலாம் இராசேந்திர சோழன்: (1012-1044) 
         தலைநகர்: கங்கை கொண்ட சோழபுரம்
         சோழர்களின் பொற்காலம், தோல்விகளை பார்த்திராத மன்னன்

                                இதற்கு பின் வந்த மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனால் உருவாக்க பட்ட சாம்ராஜ்யத்தை காத்தார்கள். இடைக்கால சோழர்களின் கடைசி மன்னன் அதிராசேந்திர சோழன் பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் இறக்க நேரிட்டது. வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு, முதலாம் இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் கீழ் வந்தது.

முதல் சாளுக்கிய சோழன்

குலோத்துங்க சோழன்

ஆட்சி புரிந்த காலம்: 1070-1120

இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசனை சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க
சோழன் ஆவான். முதலாம் குலோத்துங்க சோழன் அதிராசேந்திர சோழனின் மறைவுக்கு பிறகு சாளுக்கிய வம்சத்தில் இருந்து முதலாம் குலோத்துங்க சோழன் சோழ தேசத்தை ஆட்சி செய்ய தொடங்கினான். இவர், 1070-1120 ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி செய்து வந்தார்.இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன்காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது.ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக்கொண்டன. சேரநாட்டிலும், பாண்டிநாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கைவிட்டாலும், பாண்டிய, சேரநாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வடகலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர்படை கலிங்கம் வரைசென்று போராடி வெற்றிபெற்றது.கி.பி 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக்காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழநாட்டில் பெரும் அழிவுகளை உண்டாக்கினான். இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறியவருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத்துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன


விக்கிரம சோழன்

ஆட்சி புரிந்த காலம்: 1118-1136
முதலாம் குலோத்துங்க சோழனின் மகன்

இவர் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு 1118-1136 ஆண்டு காலகட்டத்தில் ஆட்சி செய்து வந்தார். விக்கிரமசோழன் (1122-1135)
முதலாம் குலோத்துங்கனுக்கும் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே சோழ இராச்சியத்தின் அரசனாக கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூடப்பட்டான்.பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. தன் தந்தையின் காலத்தில் பல போர்களில் பங்கெடுத்த விக்கிரமன், தனது ஆட்சிக் காலத்தில் மிக குறைந்தப் போர்களிலேயே ஈடுப் பட்டான். சேர நாடும் பாண்டிய நாடும் இவனுக்கு பணிந்தே இருந்தனர். விக்கிரமசோழன் தீவிர சிவபக்தனாக விளங்கினான். சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்கு பொற்கூரை வேயந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகே தனக்கு ஒருமாளிகையும் கட்டிக்கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளை கழித்தான்



இரண்டாம் குலோத்துங்க சோழன்

ஆட்சி காலம் 1133-1150
விக்கிரம சோழனின் மகன் 

இரண்டாம் குலோத்துங்கனை தம் உரிமைத் திருமகனாக அவனுடைய தகப்பனார் விக்கிரமசோழன் கி.பி.1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் இடையில் முடிவு செய்திருக்க வேண்டும். இந்தத்தேதிதான் அவனுடைய ஆட்சியின் தொடக்கமாக அவன் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு விக்கிரமசோழனின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது. 

ஒரு கல்வெட்டில், 'தில்லை நகருக்கு ஒளியூட்டும் வகையில் தன் முடியினை அணிந்து கொண்ட அரசன்' என்று இம்மன்னன் புகழப்படுகிறான். 'இரண்டாம் குலோத்துங்கன்' தில்லையம்பலத்தில் முடிசூட்டிக்கொண்டான் என்று இது பொருள்படக்கூடும். அல்லது இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியில் தில்லை மாநகரம் புதுக்கியும் விரித்தும் அழகுபடுத்தப்பட்டது என்பதுவும் பொருளாக இருக்கலாம். தேவர்கள் இருக்கின்ற வீதிகளே கண்டு நாணுமாறு நாற்பெருந்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரைச் சிறப்பித்தான் குலோத்துங்கன். சிற்றம்பலத்தை பொன்னாலும் பற்பல மணிகளாலும் அலங்கரித்தான். பேரம்பலத்தையும் உள்கோபுரத்தையும் பொன்மாமேரு போலப் பொன்மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான். உமாதேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும்படி சிவகாம கோட்டம் அமைத்தான். அவ்வம்மையார் விழாநாளில் உலாவருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுறுத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான். திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான். 


இவ்வாறு இவன் இத்திருப்பணிகளை எல்லாம் மிகவிரிவாக செய்யத்தொடங்கிய போது தில்லை சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு
போனதால் திருமுற்றத்தின் கண் இருந்ததிருமால் மூர்த்தத்தைப் பெயர்தெடுத்து அலை கடலில் கிடத்தும் படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கிகொண்டு, திருப்பணிகளை நிறைவேற்றினான். எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பல மூன்றில் நிருவம்ப்பெற்று அந்நாள் முதல் நிலை பெற்றிருந்த திருமால் பெரிதும் புண்படுத்திவிட்டது. மூர்த்ததைப் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி பகைவர் ஆயினர் எனலாம். ஆனால் உண்மையில் திருமால் சமையத்தில் வெறுப்பு உடையவனாக இருந்திருப்பின் அவன் தன் ஆட்சிக்குட்ப்பட்ட அனைத்து திருமால் கோயில்களுக்கும் இடையுறு செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் தில்லையில் மட்டுமே அவன் இவ்வாறாக செய்திருக்கின்றான். தில்லை நாதன்மேல் கொண்டபற்றினால் அக்கோவிலைப் பெரிதாக அமைக்க முர்ப்பட்டதிற்கு கோவிந்தராசனை வழிப்பட்டுவந்த அந்தணர்கள் இடையுறுவிளைவித்தனர். இதனால் சினம்கொண்ட சோழன் பள்ளிக்கொண்டிருந்த திருமாலை அவனது இருப்பிடமான பழைய கடலுக்கே அனுப்பிவிட்டான் என தக்கையாப்பரணியில் கூததன் கூறுகின்றார் 
குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்த விதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. பேரரசின் நிலப்பரப்பு், விக்கிரமசோழனின் ஆட்சியின் இறுதியில் இருந்தவாரே நிலைநாட்டப்பட்டது. இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறியவருகிறது. கலைத்துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச்சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன


இரண்டாம் இராசராச சோழன்

ஆட்சி காலம் 1146-1163
இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன் 

இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியைப் பற்றி பல கல்வெட்டுகள்
பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பல மெய்க்கீர்த்திகள் அவனுடைய ஆட்சியின் நிலப்பரப்பையும் அவனுக்கு அடங்கிய ஏராளமான சிற்றரசர்களின் பெயர்களையும் நிலைமைகளையும் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி ஒரு செய்தியும் இல்லாததால், இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியைப் போலவே, இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியும் பொதுவாக அமைதியாகவே இருந்ததாக தெரிகிறது

இரண்டாம் இராஜராஜன் ஆட்சியில் பேரரசு எந்த அளவு, அல்லது எதுவரை பரவியிருந்தது என்பது அவன் கல்வெட்டுகளால் உறுதிப்படுகிறது. கெந்தட்டியிலுள்ள அவனுடைய 7ம் ஆண்டுக் கல்வெட்டு குவலாள நாட்டில் சூற்றூரில் ஒருமலை மீது காடுவெட்டு என்ற சிற்றரசன் கோயில் கட்டிய விவரத்தையும், நிகரிலாச் சோழமண்டலத்தின் ஒரு பகுதியான கங்கநாட்டில் தகடூர் நாட்டைப்பற்றி சேலம் மாவட்டத்தில் கிடைத்த அழிந்து போகக்கூடிய ஓர் ஆதாரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் தகடூர்க்கிழவன் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒருவன் கொடுத்த நன்கொடையைப் பற்றி கி.பி. 1164ல் பெரும்பேர் கொங்குநாட்டிலும் கங்கநாட்டின் கீழ்ப்பகுதியிலும் இன்னும் ஓரளவு சோழரின் மேலதிகாரம் தொடர்ந்து அங்கீகரிக்கப் பட்டுவந்தது என்பதைக் காட்டுகின்றது. 

சேரப் போர்

இரண்டாம் ராஜராஜ சோழனின்காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம்.சேர தேசத்து மன்னனின் பெயர் அரிந்திலது. சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக ராசாராசா உலா கூறுகின்றது .இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான்நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரைவென்று ராசாராசனுக்கு வாகை சுட்டினான். 

பாண்டியப் போர்

                              சேரர்களைப் போலவே பாண்டியர்களும் கப்பம்தனை கட்ட மறுத்து சுதந்திர வேட்கை கொண்டு புரட்சி செய்ய ஆரம்பிக்கும் காலத்தே பெருமான்நம்பி பல்லவராயன் தலைமை தாங்கிய சோழர் படை பாண்டிய தேசத்தை மையம் கொண்டு சென்றது. திரை செலுத்தி வந்து பாண்டியன், முரண்பட்டதை பற்றி அன்னோர் பால் திரை கொள்ள வேண்டி இப்போர்கள் நிகழ்ந்திருக்கலாம். காவிரிப்பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாகதான் இருக்கவேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப்பிரச்சனிப்பற்றித் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம். மேற்கு மழைத்தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக்காவிரி) சோழநாடு செழிக்கவிடாமல் இருக்கும் பொருட்டு அடைத்துவிடுகின்றனர். இதனை அடுத்து சோழன்படை எடுத்துசென்று பகைமை வென்று காவிரிதனை சோழநாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப்படுகின்றான். 

தன்தந்தையை போல் சிவப்பக்தனாகிய இரண்டாம் ராஜராஜன், தன் பாட்டன் முதலாம் ராஜராஜனைப்போல் அழியாப்புகழ் அடைய
விரும்பினான். போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்த இவன், தனது சிவப்பக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் ராஜராஜேஸ்வரம் என்னும் கோவில் தனிக்கட்டினான். தென்னகத்தின் சிறந்த கலைக்கோவில்களில் ராஜ ராஜெஸ்வரமும் ஒன்றாகும். தன்பாட்டனின் பெயரைப் பெற்றிருந்த இவன், அவரைப்போல வேதனது புகழையும் சரித்திரத்தில் நிலைப்படுத்தும் பொருட்டு இந்தக் கலைக்கோவில்தனை கட்டினான். கலைகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்ததாக ஓட்டக்கூத்தார் தனது உலாவில் பாடி உள்ளார். அனைத்து நாயன்மார்களின் சரித்திரத்தையும் இக்கோவிலில் அவன் வரைவித்தான். முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப் பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. போசளர், மேலைச்சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. பேரரசுக்குள் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாறுதல், ஆங்காங்குள்ள குறுநில மன்னர்கள் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் விரிவடைந்து தலைதூக்கியது. 

இதன் காரணங்களால், முதலாம் இராஜராஜனாலும் அவனுடைய பின்னோர்களாலும் பாடுபட்டு, திட்டமிட்டு, உறுதியுடன் அமைக்கப்பட்ட 'மையஅரசு' என்ற நிர்வாக கட்டுகோப்பு இருந்த இடம் தெரியாமல் சிதைந்துவிட்டது. இரண்டாம் ராஜாதிராஜ சோழன் என்றப் பட்டப்பெயருடன் அரியணை ஏரியவன் அரசப்பீடத்தின் நேரடி வாரிசுகிடையாது. தனது இறுதி நாட்களில் தனக்கு அடுத்து அரசனை அடைவதற்கு தனது வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததால் தனது தாயத்தினருள் ஒருவனான எதிரிளிப்பெருமாள் என்பானுக்கு முடிசூட்டி விட்டு மரணம் அடைந்தான்.


இரண்டாம் இராசாதிராச சோழன்

ஆட்சி காலம் 1163-1178
விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரன்

இரண்டாம் இராஜராஜன் தன்னுடைய ஆட்சியின் இறுதியில்  நேரடியாக
ஆடவர் வரிசையில் அரசுரிமைக்கு உரியோர் இல்லாத காரணத்தால் விக்கிரம சோழனின்மகள் வழிப் பேரனான இரண்டாம் இராசாதிராசன் பட்டத்திற்கு வரவேண்டும் என்று முடிவு செய்தான். இரண்டாம் இராசராசனுடன் சேர்ந்து, இரண்டாம் இராசாதிராசன் சிலவருடங்கள் அரசப்பிரதிநிதியாக ஆண்டு வந்தான். 

பாண்டியப் போர்

இரண்டாம் ராசாதிராசனின் காலத்தில் ஆரம்பித்தது பாண்டிய தாயாதிகளின் பகைமை சண்டைகள். தாயாதிகளான குலசேகரப்பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர். குலசேகரப் பாண்டியன் சோழனின் உதவியை நாடினான். பராக்கிரம பாண்டியன் சிங்களன் பராக்கிரமபாகுவின் உதவியை நாடினான். இவ்வாறு இந்த இரண்டு மன்னர்கள் பொருட்டு சோழர்களும் சிங்களர்களும் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். 

தாயாதி சண்டையினில் பாண்டிய தேசத்தினை ஆண்டுக்கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை குலசேகரப்பாண்டியன் முற்றுகை இட்டான்.
பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னனாகிய பராக்கிரமபாகுவின் உதவியை கோரினான். அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்களன், தனது மாதண்ட நாயகனை பெரும்படையுடன் பாண்டிய தேசத்துக்கு அனுப்பித்தான். சிங்களப்படை நுழைவதற்குள் குலசேகரன், பராக்கிரம பாண்டியனையும் அவனது உற்றத்தையும் கொன்று ஆட்சியை கைப்பிடித்தான். இதனை அறிந்த சிங்கள மாதண்டன் மதுரை நகரத்தினுள் நுழைந்து பாண்டிய படைகளை அழித்தான், பராக்கிரமனின் புதல்வனாகிய வீரபாண்டியனை ஆட்சிப்பொறுப்பில் எற்றுவித்தான்.

பராக்கிரம பாண்டியனின் ஆட்சியை விரும்பாத பாண்டியர்கள் அவனது மகனாகிய வீரப்பாண்டியனின் ஆட்சியை விரும்பவில்லை. அவர்கள் குலசேகர பாண்டியனையே மன்னனாக்க விரும்பினர், அவர்கள் ஒரு பெரும்படை சேர்த்து வீரப்பாண்டியனை ஆட்சியில் இருந்து அகற்றினர். இதனை உணர்ந்த சிங்கள மாத்தண்டன் உதவிப்படை கோரி சிங்களனிடம் விண்ணப்பித்தான். அதனால், சிங்கள மன்னன் ஜகத்விஜயன் என்ற தண்டனாயகனை சிங்கள மாதண்டனாயகனுக்கு துணை அனுப்பித்தான். இந்த இரண்டு வீரர்களிடம் ஈடுக்கொடுக்க முடியாத குலசேகரன் தனது அரியாசனத்தை இழக்க வேண்டி இருந்தது. 

சோழர்களின் நுழைவு


அரியாசனத்தை இழந்த குலசேகரன் இரண்டாம் ராசாதிராசனின் உதவியை கோரி சோழனின் மாளிகையை அடைந்தான். தன்னிடம் புகலிடம் அடைந்த குலசேகரனுக்கு உதவி செய்யும் பொருட்டு பெருமானம் பிப்பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பிவைத்தான். தோண்டிப்பட்டணத்தில் சோழர்களுக்கும் சிங்களர்களுக்கும் முதல்போர் ஆரம்பித்தது. முதல்போரில் சிங்களப்படைகள் வெற்றியடைந்தன. இதனால் சோழமக்கள் அச்சம் கொண்டனர். அடுத்து நிகழ்ந்த போரில் திருச்சிற்றம் பல முடையான் பெருமானம் பிப்பல்லவராயன் சிங்களப்படைகளை வெற்றிக்கொண்டான். சிங்கள மாதண்டநாயகனையும், தண்டநாயகன் ஜகத்விஜயனையும் கொன்று சோழர்களின் புகழினை நாட்டினான். அத்துடன் அல்லாமல் சிங்களத்தலைவர்கள் இருவரின் தலைகளையும் அரண்மனை வாயிலில் மாட்டிவைத்தான். இதனை அடுத்து குலசேகரப்பாண்டியன் அரியணை ஏறினான்.

சிங்களப் போர்


சோழர்களிடம் தோல்வியை அடைந்ததை பராக்கிரமபாகு ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதனால் தனது தோல்வியை அகற்ற பராக்கிரமபாகு புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் போன்ற ஊர்களில்
படைகளைத் திரட்டி படகுகளையும் ஆயத்தம் செய்தான். இதனை ஒற்றறிந்த சோழன், அம்மையப்பா அண்ணன் பல்லவராயன் தலைமையில் படை ஒன்றை திரட்டினான். சிங்களனின் தயாதியான சீவல்லபன் என்பவன் சோழனின் உதவியை கேட்டு சோழ தேசம் வந்தான். அவனுக்கு உதவும் வகையில் தனது படையை பராக்கிரமபாகு வினை எதிர்க்க அனுப்பினான். மாதோட்டம், புலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களிலும் சோழனுக்கும் சிங்களனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. அது மட்டுமில்லாமல், இப்போரில் ஆயிரம் யானைகளை வென்று, பல்லாயிரம் மதிப்புள்ளவைகளை வென்று சோழனுக்கு அண்ணன் பல்லவராயன் காணிக்கை அளித்ததாக திருவாலங்காடுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

சோழர்களிடம் வலிமையை இழந்த சிங்களன், தான் பராக்கிரமபாண்டியனிற்கு உதவியதால் தான் இந்த தோல்விகளை அடைய நேர்ந்தது என்பதனை உணர்ந்து, தனது ஆதரவை குலசேகரப் பாண்டியனிற்கு நீட்டினான். தனது புதல்வியை குலசேகரப் பாண்டியனிற்கு திருமணம் முடிப்பித்தான்.இதனால் ராசாதிராசன் தனக்கு உதவியதை மறந்த குலசேகரன் சிங்களனின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த சிங்களர்களின் தலைகளை அகற்றி அவர்களுக்கு கல்தூண் நாட்டினான். இதனை அறிந்த சோழன் குலசேகரன்பால் வெகுண்டெழுந்தான். தனது உதவிகளை மறந்து சிங்களனுடன் தொடர்புக்கொண்ட குலழேகரனை ஆட்சியை விட்டு நீக்குவதற்கு முடிவு செய்தான். இதனையடுத்து அண்ணன் பல்லவராயன் மற்றும் பெருமானம் பிப்பல்லவராயன் தலைமையில் படைகளை அனுப்பினான். இவ்வாறு பெரும்படைகளோடு சிங்களனையும் பாண்டியனையும் எதிர்த்து சோழர்கள் வெற்றிநடைப்போட்டு பாண்டியதேசத்தினை முற்றுகை இட்டனர். மிகக்கடுமையாக நிகழ்ந்த போரினால் சிங்களர்கள் தோற்று புறமுதுகிட்டு ஈழமண்டலத்தின்
தென்கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கே ஓடினர். போரினில் தோற்ற குணசேகரப்பாண்டியனும் ஈழதேசத்தில் புகலிடமடைந்தான். இதனையடுத்து வீரப்பாண்டியனிற்கே பாண்டியதேசத்தினைக் கொடுத்து தனக்கு படிந்த மன்னனாக ஆட்சிப்புரிந்து கப்பம் செலுத்தப்பணித்தான் சோழன். இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் இரண்டாம் ராசாதிராசசோழன். 

சுருங்கிக்கொண்டிருந்த சோழர்களின் வரைப்படத்தினையும் வீரத்தினையும் மலர்ச்சி அடைய செய்த பெரும் வீரனாக திகழ்ந்தான்
இரண்டாம் ராசாதிராசன். இவனது காலத்தில் சோழ மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருந்தனர். பாண்டியர்களையும் சிங்களர்களையும் வென்று சோழர்களின் புகழினை இறங்காமல் காப்பாற்றினான் ராசாதிராசன். ஆனால் கால ஓட்டத்தில் இரண்டாம் ராசராசனின் மகன் வளர்ந்து பருவத்தினை அடைந்தான். அவனது புஜங்களும் போர்தினவெடுத்தன. இராசாதிராசனின் போர்கலந்த சுற்றுசுழலில் வளர்ந்த அவன், சோழர்களின் புகழினை உச்சிக்கு கொண்டு செல்ல எண்ணினான். தனக்கு உரிய அரசபீடம் கிடைக்காதா என்று ஏங்கினான். இதனை அறிந்த ராசாதிராசன் ராசராசனின் புதல்வனாகிய மூன்றாம் குலோத்துங்கனுக்கு அரசபதவி அளித்துவிட்டு தெலுங்குதேசம் சென்றான்.


மூன்றாம் குலோத்துங்க சோழன்

ஆட்சி காலம் 1173-1218
இரண்டாம் இராசராச சோழனின் மகன்
கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டுஆட்சி செய்தார்


இரண்டாம் இராஜராஜன் இறந்தபோது அவனுடைய பச்சிளம்பிள்ளைகளை
பல்லவராயர் பாதுகாத்து வந்தார். அந்த பச்சிளம்பாலகர்களுள் ஒருவராகக் குலோத்துங்கன் இருந்திருக்க முடியாது என்பதும் வரலாற்றின் படி அறியக்கூடியதாயிருக்கிறது. குலோத்துங்கன் என்பதுவும் இரண்டாம் இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் குமாரகுலோத்துங்கன் என்பவனும் ஒருவனா என்ற குழப்பம் இருக்கிறது. ஒருவனே ஆயின் தன் முன்னவனைப்போல இவனும் சோழப்பேரரசர்களின் நேர் உரிமையாளன் அல்ல என்ற முடிவு ஏற்பட்டுவிடும். 

முதலாம் பாண்டியப் போர்


ராஜாதிராஜனின் துணையால் பாண்டிய நாட்டினை அடைந்த வீரபாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மைந்தன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்கனிடம் சரண் அடைந்து, தனக்கு பாண்டிய தேசத்தை பெற்று தருமாறு கேட்டுக்கொண்டான். சோழர்களுக்கு தீமை செய்யும் வீரபாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்க, போர் தினவேடுத்திருந்த குலோத்துங்கன் சோழப்படையை பாண்டியதேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை இவனே தலைமைதாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான் அந்த வாலிபவீரன். எழகப்படை, மறவர்படை, ஈழப்படை ஆகியவை சோழனுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் புறம் கண்டோடினர். போரினை வென்ற சோழன் தன்பால் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியநிடத்தே பாண்டிய தேசத்தை ஒப்படைத்து கப்பம் கட்டுமாறு பணிவித்தான். 

இரண்டாம் பாண்டியப் போர்

போரினால் துவண்ட வீரப்பாண்டியன், சேர தேசத்தை அடைந்து வீரகேரளன்
உதவியை கோரினான். சேரப்படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான் வீரப்பாண்டியன். தனது பாண்டியதேசத்தை அடையும் பொருட்டு அவன் மதுரை மாநகர்நோக்கி தனது படையை நகர்த்தினான் வீரபாண்டியன். இதனை அறிந்த சோழன் மதுரைக்கு கிழகே உள்ள நெட்டூரில் பாண்டிய படைகளை சந்தித்தான். அங்கே ஏறுப்பெரும்படைகளுக்கும் நடுவே மிகப்பயங்கரப் போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இந்தப் போரிலும் வீரபாண்டியன் தோல்வியையே சந்தித்தான்.

தோல்விக்கு பின் பாண்டியன் சேரதேசம் சென்று வீரகேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டிய போரில் குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீரகேரளன், பாண்டியனிற்கு அடைக்கலம் கொடுத்தால் சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்து அவன் மேல் கொண்ட மதிப்பால் பாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பிவைத்தான். அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாளகொடுத்தான்.


ஈழப் போர்

சோழர்கள் சிறப்புற ஆட்சி புரிவதனை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே சோழர்களுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் இருந்தனர்.
அதுமட்டும் இல்லாமல் பாண்டிய மன்னர்களை தூண்டிவிட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்ப்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன் தனது சோழப்படைதனை இலங்கை தேசம் நோக்கி அனுப்பிவைத்தான். இதனை அடுத்து சோழ தேசத்திற்கும் ஈழதேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழதேசம் கவர்ந்தது. 

கொங்கு நாட்டுப் போர்

ஈழதேசத்தில் போர்புரிந்த காலத்திலேயே சோழன் கொங்கு தேசத்திலும் போர்புரிந்ததாக அறியப்படுகின்றது. ராஜாதிராஜன் காலத்தில் ஆட்சி புரிந்துவந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்து வதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களா கதங்களை அறிவித்துக்கொண்டனர். இதனால் வீறுக்கொண்டு எழுந்த குலோத்துங்கன், பாண்டிய தேசத்தினை கைப்பற்றியவுடன் தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து கொங்குதேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடுகொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேரமன்னர்கள் கிளை வம்சத்தவர்களாக அறியப்படுகின்றனர்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் அடைந்த கொங்கு மன்னனிர்கே அவனது தேசத்தினை அளித்து, தனக்கு அடங்கி கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான். 

மூன்றாம் பாண்டியப் போர் 

விக்கிரம பாண்டியனின் இயற்கையான மறைவுக்கு பிறகு குலசேகரபாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன்
குலோத்துங்கன் பாண்டியர்களுக்கு செய்த உதவியை மறந்து, ஈழஅரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான், இதன் பொருட்டு மூன்றாம் பாண்டியப்போர் நிகழ்ந்தது. குலசேகர பாண்டியன் தனது மரப்படையும் எழகப்படைதனையும் திரட்டிக்கொண்டு குலோத்துங்கனை எதிர்த்து காவிரி நதிக்கரை அருகே மட்டியூர் என்ற இடத்திற்கு அருகே சந்தித்தான். பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த இப்போர் பலநாட்கள் நடந்ததாகவும் போருக்கு பின் மதுரை நகரினில் இருந்த பாண்டிய கோட்டைகளை தகர்த்தெறிந்தான். பாண்டியனோ போரினால் பின்வாங்கி தன்மக்களை காப்பாற்றிக்கொண்டு ஈழதேசத்தில் அடைக்கலம் புகுந்தான். இந்த வெற்றிக்கு பின்பு சோழன் பாண்டிய தலைநகரத்தில் சோழபாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக்கொண்டான்.

மூன்றாம் இராசராச சோழன்

ஆட்சி காலம் 1216-1256
மூன்றாம் குலோத்துங்க சோழனின் மகனாவார்.

மூன்றாம் இராசராசனின் ஆட்சி துன்பங்களுடனும் துயரங்களுடனும் தொடங்கியது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேடிற்கு முன்னறிவிப்பாக இருந்தன. சோழரைக் காப்பாற்ற மீண்டும் போசாளர் உதவிக்கு வர வேண்டியதாயிற்று.

பாண்டியனின் படை எழுச்சி

மாறவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். அடிமைப்பட்டுக் கிடந்த தனது மக்களை வீறுகொண்டு எழுப்பித்தவன் சுந்தரபாண்டியனே ஆவான். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்திலேயே களங்கங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு
ஈடுக்கொடுக்கு முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான் ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராசராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லமால் இருப்பதை அறிந்த சுந்தரபாண்டியன் விடுதலை வேட்கைகொண்டு வீறுகொண்டு எழவேண்டிய சமயம் இதுவே என்று சோழனை எதிர்த்து போர்களம் புகுந்தான் பாண்டியன். மூன்றாம் ராசராசச்சோழன் சோழர் குலத்தில் வந்தவன் ஆனாலும் அவனுள் அறிவாற்றலும் வீரமும் இல்லாமல் இருந்தான். குலோத்துங்கனின் ஆற்றலின் நிழலில் இருந்த ராசராசச் சோழன், குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிபுரிவதற்கு சற்றும் திறம்படைத்தவனாக இருக்கவில்லை. இதனால் தொன்றுதொட்டு வந்த சோழர்களின் சாம்ராஜ்யம் தொய்வடைந்தது. சந்தபத்திற்காகக் காத்திருந்த பாண்டியன், தக்கச்சமயத்தில் படைஎடுத்து வந்து சோழப்பேரரசை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரைப்படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்லவைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடுகொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராசராசச்சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக்கொண்டு தஞ்சை வரை ஆட்சிபுரிந்தான் ராசராசச்சோழன். 

சுந்தரபாண்டியனுக்கு அடிப்பணிந்து ஆட்சிபுரிந்து வந்த ராசராசச்சோழன், போசளமன்னன் வீரநரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலு அடைந்துவிட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்குக் கட்ட வேண்டியக் கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரில் படுதோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க்கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்குப்பின்பு சோழனின் நிலையைபற்றி கத்தியகர்நாமிதம் என்னும்
நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்கபட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராசராச சோழனுக்கு அடி பணியாமல் ராசராசனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினான். சோழனை சிறைப்படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீரநரசிம்மன் திருவயிந்திபுரம் வரைச்சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப்பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப்பற்றினான். வீரநரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராசராசச் சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்துக்கொண்டான். 

ராசராச சோழனை மீட்ட பின்புக் காவேரிக்கரைவரைச் சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீரநரசிம்மன். காவேரிக்கரை வரை சோழர்களின் நிலப்பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகைக்குட்பட்டு, அவர்களது ஆட்சியைச்சார்ந்தே இருந்தனர். தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராசராசச்சோழன், தனது இயலாமையை உணர்ந்தே இருந்தான். தனது நாற்பதாம் வயதில் தனது மகன் மூன்றாம் ராசேந்திரச் சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சிக்காலத்திலேயே அவனை மன்னனாக அறிவித்தான்.


மூன்றாம் இராசேந்திர சோழன்

ஆட்சி காலம் 1246-1279
மூன்றாம் இராசேந்திர சோழன், மூன்றாம் இராசராச சோழனின் மகன்.

மூன்றாம் இராஜேந்திர சோழன் பட்டத்திற்கு உரியவனாக, கி.பி 1246ல் ஏற்றுக்கொள்ளப்பட்டான். அவன் மூன்றாம் இராஜராஜ சோழனைவிடவும் திறமைசாலி.
இராஜராஜனின் திறமையின்மையாலும் வடிகட்டிய முட்டாள்த்தனத்தாலும் சோழப்பேரரசு இழந்துவிட்ட பழைய அதிகாரங்களையும் செல்வாக்கையும் ஒரு சிறிதளவாவது மீட்க மூன்றாம் இராஜேந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சிகளை அவனது கல்வெட்டுகளிலுள்ள சமஸ்கிருத மெய்க்கீர்த்தி சொல்லுகிறது அவனது பட்டத்து உரிமை ஏற்பட்ட பின் 14 ஆண்டுகளுக்கு இராஜராஜன் பெயரளவில் ஆண்டான். ஆனால் அதிகாரம், அவனை விடத்திறமைமிக்கவனான இராஜேந்திரனிடம் இருந்தது.

மூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் இறுதியில் முக்கியமாக 34ம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு, வடஆற்காடு நெல்லூர் மாவட்டங்களில் மட்டுமே அவனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. மொத்தத்தில் அவனுடைய கல்வெட்டுகள் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுருங்கின. அதே காலத்தில் இராஜேந்திரன் கல்வெட்டுகள் ஏராளமாகவும் சோழநாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

சோழஅரசுக்கு ஏற்பட்ட இழிவினை இராஜேந்திரன் நீக்கிவிட்டான் என்று மூன்றாம் ஆண்டுக்காலத்துக்கு இராஜராஜன் இரண்டு முடிகளைச் சூட்டிக்கொள்ளும் அளவுக்கு இராஜேந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காட்டினான் என்று மெய்க்கீர்த்தி சொல்கிறது. முடியோடு இருந்த பாண்டியனின் தலையை வெட்டுவதில் இராஜேந்திரன் வல்லவன் என்றும் அது குறிப்பிடுகிறது. திருப்புராந்தகம் கல்வெட்டு 15ம் ஆண்டில் இதை இன்னும் நிதானமாகச் சொல்கிறது 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின' என்பது வாசகம்.

இராஜேந்திரன் பாண்டியநாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான் என்பது உண்மையே. சோழமன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே.
பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டுமுறை சோழநாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் கலகம்செய்து இராஜராஜனைச் சிறைவைத்ததற்கும் பாண்டியரே காரணம்.

எனில் மூன்றாம் இராஜேந்திரனிடம் தோற்ற பாண்டிய மன்னர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வல்லமை படைத்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு எதிராக மூன்றாம் இராஜேந்திரன் எதையும் செய்து விடவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் இறந்த பிறகும் கி.பி 1251ல் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பட்டத்திற்கு வரும் முன்னரும் பாண்டிய நாட்டில் சரியான அரசர்கள் இல்லை. எனவே சோழரின் மேலாதிக்கத்தைத் தற்காலிகமாக ஏற்ற அரசன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன்(பட்டம் 1238) இருக்கவேண்டும்.

தனது தந்தைக் காலத்தே சோழதேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும்படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழதேசத்தினை நிலை பெற செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டனின் பெயரினை தன்பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார்செய்து பாண்டியர்களுடன் போர்புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகரபாண்டியன் என்பவன் பாண்டியபடையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான்.

ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழதேசத்தினை வெற்றி பெறசெய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம்கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழதேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படைஎடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர்நாசம், படைநாசம், செல்வம் என பாண்டியர்களின் வசம் இருந்தவைகள் நாசம் ஆயின.



சோழர்களின் ஆட்சி பரம்பரை 



கி.மு 300'ல் தொடங்கிய சோழ ஆட்சி கி.பி 1279'ல் முடிவுற்றது. கி.பி 800'ல் தொடங்கி கி.பி 1218 வரை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாய் தெற்கு ஆசியாவை ஆண்டார்கள். கிழக்கு இந்தியா, இலங்கை, பர்மா மற்ற சில நாட்டு மன்னர்களை கப்பம் கட்டவெய்த சோழர்கள் இறுதியில் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும்நிலை மிக கொடுமை.  ஒவ்வொரு மன்னனுக்கும் ஒரு சிறப்புண்டு அதனை திறம்பட கையாண்டு சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பினார்கள் இறுதியில் மீண்டும் பழைய நிலைக்கே வந்தாலும் அவர்களின் புகழும், பெருமையும், திறமையும், வீரமும்  இன்றளவும் போற்றிப்பாதுகாக்க படுகின்றன.

*****முற்றும்*****